Friday, 14 June 2013

என்னை விட்டு விடுங்கள்




ஒரு பிச்சைக்காரனின் 
அழுக்குப் பாத்திரத்தில் 
சில்லறையை வீசி விட்டுப் போகும் 
சீமாட்டியைப் போலத்தான் 
என்னிடம் அவ்வப் போது 
பெருந்தன்மையும் 
சிறு கருணையும் காட்டினீர்கள் 

சமூகத்தின் மேலடுக்கு 
கீழடுக்கு பற்றிப் பேசிக் கொண்டே 
என் கால்களுக்கு 
கீழே பள்ளம் தோண்டினீர்கள் 
உங்கள் அறிவாளிச் சமூகத்தால் 
நான் தீண்டப் படாதவனாகவே 
இருந்து விட்டுப்போகிறேன் 
அது பற்றிய கவலை எனக்கில்லை இனி 

உங்கள் மூளையின் 
மூட்டு தேயுமட்டும் 
திண்ணையில் உட்கார்ந்து 
இந்த சமூகத்துக்கு 
சிந்தியுங்கள் 
சிந்தித்து சிந்தித்து 
நிந்தனை செய்யுங்கள் 

உழைத்துக் களைத்த 
உடல் வலி தீர 
எங்கள் மாலை நேரத்து 
மது மயக்கத்தின் 
சலம்பல்களுக்கு 
சற்றும் சளைத்ததல்ல 
உங்கள் இலக்கியப் புலம்பல்களும் 
போர்களும் அக்கப் போர்களும் 

நீங்கள் 
பாரதியாய் முண்டாசு கட்டிக் கொள்ள 
பாவி என் கோவணத்தை உருவாதீர்கள் 
உங்கள் சிரசின் மேல் 
மகுடம் ஜொலிக்கட்டும் 
என்னை விட்டு விடுங்கள் 

உங்கள் மூளையை நம்பி நான் இல்லை 
யாரை நம்பியும் நான் இல்லை 
உங்கள் அளவிற்கு எனக்கு 
சிந்தனை வளராவிட்டாலும் 
என் கைகளில் வலுவிருக்கிறது 
யாரை நம்பியும் நான் இல்லை 
ரேகைகள் தேய்ந்த 
என் கைகளைத் தவிர 

என் வாழ்வைப் படம் போட்டும் 
பாடலாக்கியும் 
இருந்த என் ஒட்டுத் துணியையும் 
அவிழ்த்துப் போட்ட 
நீங்கள் படைப்பாளியாய் 
இருந்து விட்டுப் போங்கள் 
உழைப்பாளியாய் இருப்பதில் 
இழிவொன்றுமில்லை எனக்கு..!

0 comments:

Post a Comment