Thursday, 11 April 2013

சில சமயம்.....







தொலைந்து போன
காகிதங்கள்
மீண்டும் கிடைத்தது போல்
மகிழ்ச்சி!

மனசு வெட்கப் படாமல்
சில சமயம்
தனக்குத் தானே
குளித்து கொள்ளும்..

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்..

எதைக்
கட்டிப் போட முடியும்..
கட்டுப்படுகிறவை
தானாய் விரும்பாமல்...!

தாலாட்டு.....


 





பொன்னெடுத்து நிறமெழுதி
பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

அறிவுக்குச் சூரியனாய்
அழகுக்குச் சந்திரனாய்
பொறுமைக்கு பூமியாய்
புகழுக்குப் பிறந்தவளாய்
வறுமைக்கு வள்ளலாய்
வீரத்துக்கு விஜயனாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

      Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ•●♥♥HASEEM♥♥●•Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

தமிழா தமிழில் பேசு....


 


 
கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ
கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே;
உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ
உணர்விழந்து மறப்பதுதான் முறையோ?

தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப்
பேசிப் பழகிவிடு தமிழா!

அகத்தியனார் தந்தமொழி தமிழாம் - இச்
சகத்தினிலே சிறந்தமொழி அதுவாம்;
அகத்தினிலே தவழவிடு தமிழை! - அதுதரும்
சுகத்தினிலே திளைத்துவிடு தமிழா!

நாட்டில் பலமொழிகள் இருக்கு - அதிலேநம்
தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா!

மூத்த மொழியென்று சொல்வார் - அதனைநம்
வீட்டு மொழியாக்கிக் கொள்வோம்;
மூத்த குடிமக்களோடு நாம்
தமிழில் உரையாடி மகிழ்வோம்!

தமிழை அமுதென்று சொன்னார் - நீ
தமிழைப் படித்துப்பார் புரியும்!
தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்
கவிதை படித்துப்பார் தெரியும்!

வார்த்தை வளமிகுந்த தமிழை - நாம்
வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்!
வழக்கம் மாற்றிக்கொண்டால் - சொற்கள்
வழக் கொழிந்து போகும்!
,Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ•●♥♥HASEEM♥♥●•Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ